9.1.10

Avatar - 3Dயின் இன்னொரு பரிணாமம்

3D திரைப்படம் என்றவுடன், நமது முகத்தில் எறியப்படும் ஈட்டிகளையும், தீப்பந்துகளையும், குத்துகளையும் எதிர்பார்த்தே தான் சென்றேன். அதே போல் அட்டையால் செய்யப்பட்ட கண்ணாடியையும் எதிர்பார்த்திருந்தேன். டிக்கெட் விலையை 2 மடங்கு ஆக்கியிருந்தார்கள், oops.., ஆனால் கையில் அழகிய டிசைனர் கண்ணாடிகள். இனி 3D படம் பார்க்கும் போது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியும். கூச்சம் தேவையில்லை.




ஏற்கனவே மூன்று நான்கு 3D திரைப்படங்கள் இந்த வருட வெளியீட்டிற்கு தயாராகி இருப்பது, டிரைலர்களில் தெரிந்தது. அனைத்தும் அனிமேஷன் படங்கள். சரி அவதாருக்கு வருவோம்.




James Cameron என்ற வார்த்தைதான் இந்த படத்திற்கு என்னை இழுத்தது. மிக மிக சாதாரண கதை, one liner, one liner, என்று கேள்வி படும்போதெல்லாம், ஒரு வரியில் எப்படி ஒரு கதையை சொல்வது என்று நான் பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனால் இந்த கதையை என்னால் ஒரு வரியில் தாராளமாக சொல்ல முடியும். ஆனால் திரையில் அவர் கொடுத்திருக்கும் விதம், அமர்க்களம். கதையும் சொல்லிக் கொள்ளும்படி அட்டகாசம் இல்லை, வசனங்கள் பிரமாதம் என்று சொல்லமுடியாது, ஆனாலும் அப்படி என்ன தான் இருக்கிறது இந்த படத்தில்?



அனுபவம்... இது ஒரு அனுபவம், கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்து பார்த்து அலுத்து போயிருந்தால், நாம் பார்ப்பது, கிராபிக்ஸ் என்றே தெரியாத கிராபிக்ஸ் காட்சிகள். 3D படத்தின் அச்சுறுத்தலை பார்த்து அயர்ந்து போயிருந்தால் நாம் பார்ப்பது ஒரு இனிய உணர்வை தரும் 3D காட்சிகள். அப்படி ஒரு பிணைப்பு, கிராபிக்ஸிற்கும் 3Dக்கும் மட்டுமல்ல, அந்த பிணைப்பு கதையிலும் படத்திலும் இருக்கிறது. எந்த ஒரு இடத்திலும் கிராபிக்ஸும், 3Dயும் நமது கவனத்தை படத்தில் இருந்து சிதறவிடாமல் செய்ய வேண்டும் என்பதில் டைரக்டர் தெளிவாக இருந்திருக்கிறார்.




முந்தைய 3D யில் மொத்த படமும் சாதாரணமாகத் தெரிய ஒரு சில பாத்திரமோ பொருளோ மட்டும் உங்கள் கண் முன்னே தெரியும். ஆனால் இந்த படத்தில் மொத்த படமும் சில அடுக்குகளாய் திரையில் தெரிகிறது. ஏதோ ஜன்னல் வழியே நீங்கள் வேறு ஒரு உலகத்தை காண்பது போல. இன்னும் 20 வருடத்திற்கு பிறகு திரைப்படங்கள் எப்படி இருக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அவதார் படம் பாருங்கள்.

21.12.09

முதன்முதலாய் - A SIMPLE LOVE STORY


 ”ஹே அர்விந் என்ன நீ மட்டும் நிக்கிற, மத்தவங்கெல்லாம் எங்க?” என்றாள் நிக்கி.

”ஹப்பாடி நீயாவது வந்தியே, இன்னும் யாரும் வரலை நிக்கி.”

”யாரும் வரலையா? 6.30க்குனு சொன்னீங்க, நான் 6.45 ஆயிடுச்சேனு வேகமா வந்தேன் இன்னும் யாரும் வரலைன்ற, போன் பண்ணீ பார்த்தியா?”

”ம்... அருண் வரமுடியாதாம் காய்ச்சல் மாதிரி பீல் பண்றானாம், பிரகாஷோட போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணியிருக்கான், காட்டான் வரலைன்னுட்டான். வினிதாவும், நிஷாவும் கூட வரலையாம்.”

”டேய் ஏண்டா இப்படி சொதப்புறீங்க, நான் எங்க வீட்ல சண்டை போட்டு வர்றேன் தெரியுமா? நான் உடனே வீட்டுக்கு போகமுடியாது.” முடிவாய் இருந்தாள்.

”இப்ப என்ன பண்றது?”

கல்லூரி நண்பர்கள் அனைவரும் கொடைக்கானல் போய் வர முடிவெடுத்த பிக்னிக்தான் இப்போ தடுமாறி நிற்கிறது. சிறிது நேரம் மொளனமாய் இருந்தார்கள்.

”நிக்கி, பக்கத்துல ஒரு அழகான இடம் இருக்கு, நாம் இருவரும் அங்க போயிட்டு வருவோமா?” என்றான் மெதுவாக, மனதுக்குள் அவள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டே.

சிறிது யோசித்தவாறே ”சரி வா, கிளம்பியாச்சுல போயிட்டு வரலாம். எங்கே?” என்றாள்.

”பக்கம்தான்”. வோவ்...யெஸ் என்று மனதுக்குள் குதூகளித்து இத்தனை நாள் காத்துக்கொண்டிருந்த தனிமை கிடைத்துவிட்டதில், பைக்கை மின்னலென இயக்கினான். அர்விந். பின்னால் நிகிதா.

இவர்கள் கேங்கில், அரிவிந் எல்லோருடனும் மிகவும் சகஜமாக பழகுவான், மிகவும் ஜாலியான ஆள், தைரியசாலி. எப்படியான சந்தர்பத்திலும் துவண்டுவிட மாட்டான். ஆனால் இவளிடம் மட்டும் ஏதோ ஒரு தயக்கம் தொடக்கத்தில் இருந்தே இருந்தது. மெதுவாக தான் தாம் காதல் வயப்பட்டிருப்பதை உணர்ந்து கொண்டான்.  பல நாட்கள் இவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று போராடி தோற்றிருக்கிறான்.

இவன் நிகிதாவிடம் நடந்து கொள்ளும் முறையைப் பார்த்து கேங் மெம்பர்ஸ்க்கு தெரிந்துவிடும் என்றெல்லாம் இவன் பயந்ததில்லை. இன்று திரும்பும் போது காதலர்களாகத்தான் திரும்ப வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டான். இதை விட வேறு வாய்ப்பு கிடைக்காது.

மெதுவாக நகர எல்லையை தாண்டியது பாதை. நேற்று இரவு பெய்த மழையில் வயல் வெளிகள், பச்சை பசேலன இருந்தது, இப்போது அடிக்கும் இளவெயிலுக்கு பார்க்க ரம்மியமாக இருந்தது. மொபைலில் எம்பி3யை சத்தமாக வைத்துக்கொண்டு, குளிர் காற்றின் ஊடே இருவரும் பயணமானார்கள். ”ஒரு நாளுக்குள் எத்தனை கனவு...”

மொளனமாய் கழிந்தது சில நிமிடங்கள்.

”உனக்காக ஒரு பெண் இருந்துவிட்டால்
அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்
நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்
திறக்காத கதவுகள் திறக்கும்”

”மொத்தமா சொதப்பிட்டாங்க, காட்டான் கூட பாரேன் வரலை, அவன போய் நாளைக்கு வச்சுக்கிறேன்.”

”எல்லோரும் தானே வரலை ஏன் அங்கித்த மட்டும் கோவிச்சுகிற, எல்லோரையும் தீத்துறுவோம் நாளைக்கு.”

பசுமையான மரங்களின் நடுவேயுள்ள பெரிய கண்மாயில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. நேரமும் தான். இருவரும் நீரில் காலை நனைத்தபடி உட்கார்ந்திருந்தார்கள்.

சில நிமிடங்கள் மெளனமாகவும், சில நிமிடங்கள் பாடல் வரிகளுடனும், சில நிமிடங்கள் புகைப்படங்களாய், சில நிமிடங்கள் அர்த்தமில்லா உரையாடல்களுமாய் கழிந்தது.

இவன் பேச நினைக்கும் போதெல்லாம் மெளனம், பெரிய சுவராய் நின்று தடுத்தது.

”நிக்கி.. நான் உன்னிடம் ஒன்று சொல்லவேண்டும்.” தொடங்கியேவிட்டான்.

”அப்படியா? நானும் தான் அர்விந்” முந்திக்கொண்டாள் நிக்கி.

சிறிய தடுமாற்றம் அரிவிந்திடம்.

”என்ன?” என்றான் வேகமாக.

”நீ சொல் முதலில்” என்றாள். “இல்லை பரவாயில்லை நீயே சொல்” என்றான் அர்விந்.

சரியென்று பேசத்தொடங்கினாள் நிக்கி.

“அர்விந், எப்படி சொல்றதுனு தெரியல...ம்ம்..நான் நமது கேங்கில் இருக்கும் ஒருவனை மனமாற காதலிக்கிறேன்.”

படாரென்று அர்விந்தின் இதயம் வெடித்து, தீ ஜ்வாலைகள் உடல் வழியே வெளியே வந்தது போல் உணர்ந்தான். அதனை அணைக்க வியர்த்து கொட்டியது. உலகமே அமைதியானது.

மொளனம்... இவனுக்கு யாரென்று கேட்க தயக்கமாய் இருந்தது. ஒரே குழப்பம், நடுக்கம்.

அடிப்பாவிகளா இன்னும் எத்தனை கதைகளில் கடைசியில இதே மாதிரி சொல்லுவீங்க?

மனது வலித்தது அவனுக்கு.

”யா.. யார் அது?” என்றான்.

”கண்டிப்பா சொல்றேன். ஆனால் இப்போ இல்லை, என் காதல் நிறைவேறுவதற்கு நம்ம ப்ரெண்ட்ஸ் அனைவரின் உதவியும் தேவை. ஆனால் முதலில் அவனிடம் பேசிக்கொள்கிறேன்.” அர்விந்தின் கண்களை பார்த்து கூறினாள்.

அங்கித்தால இருக்கலாமோ? சோப்பு விளம்பரம் மாதிரி புலம்பவச்சுட்டீங்களே.

“க..கண்டிப்பா உதவுறேன், சரி போலாமா?..ஹ்ம்”  சிரிக்க முடியவில்லை.

“நீ என்னவோ சொல்லணும்னு சொன்ன?”

“இல்லை, இன்னொரு நாள் சொல்றேன்”. எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. இருவரும் கிளம்பினார்கள்.

நிக்கியின் செல் அலறியது. நிஷா காலிங்...

”ஒரு நிமிஷம் அர்விந்” என்று ஓரமாக சென்றாள்.

”என்னடி சொல்லீட்டியா?”- நிஷா.

”பாவம்டி, இப்போதான் சொன்னேன், அவன பார்க்கவே முடியலடி, ரொம்ப சோகமா இருக்கான், இப்பவே ப்ரொபோஸ் பண்ணிடவாடி?. ப்ளீஸ்...”

”ஹே... செத்தநீ... நீ அவனத்தான் காதலிக்கிறன்ற விஷயம் மட்டும் அவனுக்கு இன்னைக்கு தெரிஞ்சது, தொலைஞ்ச நீ. அப்புறம் நாங்கெல்லாம் ரெண்டு நாளா போட்ட ப்ளான் எல்லாம் வீணா போயிடும். ஒழுங்கா அப்பிடியே மெயிண்டெய்ன் பண்ணு. நாளைக்கு பெரிய சர்ப்ரைஸ் பார்ட்டி ரெடி பண்ணியிருக்கோம், அதுல அவனோட சந்தோஷத்தை பார்த்துக்கோ, ஆனால் அதுக்கு முன்னால் அவனோட முகத்தை நாளைக்கு நாங்களெல்லாம் பார்க்கணும், தாடியே வளரனாலும் ஒட்டு தாடி வச்சுகிட்டாவது வருவான் பாரு.” என்றாள் சிரித்துக்கொண்டே.

அடுத்தநாள் மிகவும் இனிதாக அமையப்போவது தெரியாமல், கிளம்பினான் அர்விந். கூடவே நிகிதாவும், உள்ளுக்குள் இருக்கும் மகிழ்ச்சியை அடக்க முடியாமல், நாளைக்கு தயாரானாள்.

SURELY ITS GONNA BE A GREAT DAY

தமிழகச் செய்திகள்

நாணய மதிப்பு

இந்தியச் செய்திகள்

Blog Archive

பிற செய்திகள்

வாசிப்போர்

ஆ! இதழ்கள் © 2008. Template by Dicas Blogger.

TOPO